இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.;
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தமிழக அரசு கடந்த வாரம் முதலே இந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டதுடன், ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்யத் தடை விதித்து, மருந்து இருப்புகளை அகற்றவும் உத்தரவிட்டது. மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தில் நோட்டீஸ் ஒட்டினர். இதனிடையே, மத்தியப் பிரதேச சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று சுங்குவார்சத்திரம் வந்தனர். மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளையும், உள்ளூர் காவலர்களையும் அவர்கள் தொடர்பு கொண்டனர். இதன் தொடர்ச்சியாகவே, ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.