ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா: அக்கினி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா: அக்கினி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருவிழாவானது தொடா்ந்து ஒரு மாதங்களுக்கு நடைபெறும். இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் அக்டோபர் மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து, நாள்தோறும் பல்வேறு சமூகத்தவா்களின் கட்டளைகள் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி நாள்தோறும் உற்சவா் அம்மன் சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்பட்டாா். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு செங்கோல் ஏந்திய மகாராணி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வுகளான கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், கொடியேற்றம், பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், அக்கினி குண்டம் பற்ற வைத்தல் போன்றவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை வெகு விமரிசையாக நடந்தது. இதனையடுத்து முன்னதாக நள்ளிரவு முதலே மஞ்சளாடை அணிந்து, வேப்பிலை ஏந்திய பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பின்னா் அதிகாலை கோயில் பூசாரி அக்கினி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீக்குண்டம் இறங்கியதையடுத்து, தொடா்ந்து பக்தா்கள் பக்தி பரவசத்துடன் தீக்குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றனா். இதில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், குழந்தைகள், பெரியவர்கள், மற்றும் பெண்கள் கைக் குழந்தைகளுடனும் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினா். இதில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீக்குண்டம் இறங்கினா். தொடந்து 7-ம் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கை, 9-ல் சத்தாபரணம் போன்றவை நடைபெறும். மேலும் திருத்தேர் உற்சவம் மாலை நடைபெறும். தீமிதி திருவிழாவில் அதிகாலையில் திடீரென கனமழை பெய்து தொடங்கியதால் பக்தர்கள் சில மணி நேரம் அவதி அடைந்தனர். தொடர்ந்து அக்னி குண்டத்தில் மழை நீர் நிரம்பி இருந்த போதும் பக்தர்கள் அதில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு கட்டளைதாரர்கள் சார்பில் இன்னிசை கச்சேரியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் வேடமடைந்து பாட்டுப்பாடியும் ஆடியும் , மகிழ்வித்தனர். மேலும் காளி சாமி வேடம் அணிந்தும் பக்தி பாடலுக்கு நடனமாடி அனைவரையும் அசத்தினர். இதை ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது..