சிறுமி திடீர் சாவு போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர் அருகே சிறுமி திடீர் சாவு போலீசார் விசாரணை;
பரமத்திவேலூர், நவ.19: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராஜேந்திரபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி அஞ்சம்மாள். இவர்களுக்கு விஜயலட்சுமி (வயது 10), வினிதா (4) என்ற 2 மகள் களும், விஜய் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர். இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நெட்டையாம்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டமங்கலம் வந்த ராமதாஸ் பிரியாணி கடை ஒன்றில் சிக்கன் ரைஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் குழந்தைகளுக்கு சிக்கன் ரைசை சாப்பிட கொடுத்ததாகவும், அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமி விஜயலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் சிறுமி இறந்தாளா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.