சேஷபுரீஸ்வரர் திருக்கோவிலில் 10 ஜோடிகளுக்கு திருமணம்
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பில் பத்து இணையர்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.;
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கடந்த நான்காண்டுகளில் 1800 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. நடப்பு ஆண்டில் ஆயிரம் திருமணங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில்.. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இன்று சென்னையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறை சார்பில் 576 திருமணங்கள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவிலில் 10 இணையர்களுக்கு திருமணத்தை குடவாசல் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ஜோதிராமன், நாகப்பட்டினம் அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் இணைந்து மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த திருமண நிகழ்வில் 10 திருமண ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்கத்துடன், கட்டில், பீரோ, சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தலா 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் சுரேஷ், அறநிலையத்துறை துறை நிலங்கள் வட்டாட்சியர் லட்சுமிபிரபா, செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், ஆய்வாளர் ராஜ் திலக், கோவில் மேலாளர் வள்ளி கந்தன், திருக்கோவில் பணியாளர் சங்க மாநில தலைவர் குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மணவை சுப்பிரமணியம் உள்ளிட்ட சிறப்பு பணி அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.