நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்!
அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் மேள வாத்தியத்துடன், அய்யப்ப பக்தர்கள் பஜனையுடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது இதில் திரளான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா கோஷத்துடன் சென்றனர்.;
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 60-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலையில் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. இரவு பூந்தேரில் மேள வாத்தியத்துடன் அய்யப்ப பக்தர்கள் பஜனையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. நாமக்கல் ஐயப்பன் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நாள்தோறும் நடந்து வருகிறது. டிசம்பர் -13 சனிக்கிழமை நடைபெற்ற பூஜையில் 108 வலம்புரி சங்குகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. சங்குகள் சுற்றி புஷ்பங்கள் வைக்கப்பட்டன.தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து .அதன்பின் 108 வலம்புரி சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.