பன்றிகள் வேட்டையாடிய 14 நாய்களுடன் 14 பேர் கைது
மேற்கு தொடர்ச்சி மலையில், மலை பன்றிகள் வேட்டையாடிய 14 நாய்களுடன் 14 பேர் கைது. 2 லட்சத்தி 30 ஆயிரம் அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை;
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் வனசரக அலுவலர் குமரேசன் தலைமையில், கன்னிவாடி பிரிவு வனவர் பீட்டர் ராஜா, செம்பட்டி பிரிவு வனவர் சபரிநாதன் மற்றும் வனப் பணியாளர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னிவாடி வன சரகம் குட்டத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட வெயிலடிச்சான்பட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் லாரியில் பதுங்கி இருந்த நபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த அபிமன்யு, கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியை சேர்ந்த, மலையாண்டி, தங்கவேல், கருப்பையா, கோவிந்தராஜ், முருகன், மாணிக்கம், சக்திவேல், நேரு, குமரவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், மணி, மற்றொரு மணி ஆகிய 14 பேரை வேட்டையாடிய, 4 மலை பன்றிகள் மற்றும் 14 நாய்களுடன் கைது செய்தனர். இது சம்பந்தமாக மேலும் விசாரணை நடத்திய வனத்துறையினர் ஒரு லாரியும் பறிமுதல் செய்து, 14 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்தக்கூடிய ராஜபாளையத்தை சேர்ந்த, 12 ஆண் நாய், ஒரு பெண் நாய், ஒரு நாட்டு நாய் ஆகிய 14 நாய்களை திண்டுக்கல் விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர்.