பூதலூரில், வரும் 30 ஆம் தேதி 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' முகாம்
அரசுத் திட்ட முகாம்;
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒரு நாள் முழுவதும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 30.04.2025 (புதன்கிழமை) அன்று, பூதலூர் வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு, 30.04.2025 அன்று காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 30.04.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பூதலூர் வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரால் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.