மானாமதுரையில் 108 சங்காபிஷேக யாக பூஜை
Update: 2023-12-13 00:46 GMT
மானாமதுரை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாதர் திருக்கோவிலில் கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக யாக பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சுவாமி சன்னதி முன்பு ருத்ராட்சம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் 108 வெண் சங்குகளில் புனித நீர் ஊற்றி கலசங்களை வைத்து பூக்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது. ஹோமத்தில் 108 மூலிகை பொருட்கள் பழங்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. பின்னர் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின்னர் அலங்கார தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாகதீபம் காண்பித்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மனை வழிபட்டனர்.