அயோத்தியாப்பட்டணம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

அயோத்தியாப்பட்டணம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

Update: 2024-07-01 14:38 GMT

கோப்பு படம் 

அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டி ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் புழுதிக்குட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த ஜெய்ஹிந்த் (25) என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள், டிராக்டர் மீது மோதியது. இதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (63). இவர், நேற்று முன்தினம் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

 அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News