வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திண்டிவனம் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது.
Update: 2024-02-06 10:06 GMT
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கலைஞர் பித்தன் (வயது 41). வியாபாரி.இவர் நேற்று முன்தினம் திண்டிவனம் அருகே ஜக்காம் பேட்டை தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள ஒரு கடையில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சிங்கனூரை சேர்ந்த ஏழுமலை மகன் மருதமலை (25), எரும்பு என்கிற ரமேஷ் குமார் (25) ஆகிய இருவரும் கலைஞர் பித்தனை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கலைஞர் பித்தனிடம் இருந்து ரூ.1500 மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிங்கனூர் ரெயில்வே கேட் அருகில் நின்று கொண்டிருந்த மருதமலை, ரமேஷ்குமார் ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜக்காம்பேட்டை ஊராட்சி மன்ற துணை தலைவியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.