முதுமலையில் 217 வகையான பட்டம்பூச்சிகள் !

முதுமலை புலிகள் காப்பகத்தில் 217 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

Update: 2024-07-03 10:14 GMT

பட்டம்பூச்சிகள்

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல்வேறு அரிய வகையான தாவரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் உயிர் சூழல் மண்டலத்தில் வனவிலங்குகளுக்கு நிகராக பூச்சி இனங்களும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. கால நிலை மாற்றம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றை வெளி உலகத்திற்கு காட்டக்கூடிய கருவிகளாக பூச்சி இனங்கள் உள்ளன.

இதில் மகரந்த சேர்க்கைக்கு மிகவும் முக்கியமானது வண்ணத்துப்பூச்சி.வண்ணத்துப்பூச்சிகள் எனப்படும் பட்டாம்பூச்சிகள், உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான உள்ளினங்கள் உள்ளன. சில பட்டாம்பூச்சிகள் 3000 கிலோமீட்டர் வரை வலசை சென்று வரும். தமிழகத்தை பொறுத்த வரை 329 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. இவ்வாறு சுற்றுச்சூழல் சங்கிலியில் முக்கியத்துவம் வாய்ந்த பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், இயக்குனர் வித்யா மேற்பார்வையில் கோவையை சேர்ந்த இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு நிர்வாகி பாவேந்தன், டபுள்யு.டபுள்யு.எப். அமைப்பு நிர்வாகி பூமிநாதன் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 49 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 185 வகையான பட்டாம்பூச்சிகள் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "நீலகிரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் 180 வகையான பட்டாம்பூச்சி இனங்களும், இந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் 185 வகையான பட்டாம்பூச்சி இனங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்படி தற்போது 217 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன.

எதிர்காலத்திலும் இதுபோன்ற கணக்கெடுப்புகள் நடத்தி மொத்தம் எத்தனை வகையான பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன என்பது குறித்து அறியப்படும். பட்டாம்பூச்சி இனங்கள் அதிகமாக இருந்தால் வனப்பகுதி செழுமையாக உள்ளது என்று அர்த்தம். வனம் சீராக இருந்தால் மழைப்பொழிவு மற்றும் உயிர்சூழல் சங்கிலியில் அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகள் நன்றாக இருக்கும். வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க சிறப்பு திட்டம் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் மலபார் ரேவன், பாரிஸ் பீகாக், சாக்லேட் ஆல்பெட்ராஸ் மற்றும் தமிழ் மறவன் ஆகியவை முக்கியமான இனங்கள் இருப்பது தெரியவந்தது," என்றனர். .....

Tags:    

Similar News