30 நாள் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவம் புட்டாசி இறுதி நாளன்றே துவங்கியது

காவிரி துலா உற்சவம் மாதப்பிறப்பு தீர்த்தவாரி:- 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 நாட்களே உள்ளதால் 30 நாட்கள் தீர்த்தவாரி நடைபெறும் வகையில் புரட்டாசி இறுதி நாளன்றே துலா உற்சவம் துவக்கம்

Update: 2024-10-18 16:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காவிரி துலா உற்சவம் மாதப்பிறப்பு தீர்த்தவாரி:- 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 நாட்களே உள்ளதால் 30 நாட்கள் தீர்த்தவாரி நடைபெறும் வகையில் புரட்டாசிமாத கடைசி நாளான இன்றே ஐப்பசி மாதப்பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனக் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில் தருமபுரம் ஆதீனகர்த்தர்; மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் தங்கி துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாகவும் ஐதீகம். காசிக்கு நிகராக போற்றப்படும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் இந்த துலா உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 தேதி மட்டும் உள்ளதால், 30-வது நாளன்று கடைமுகத் தீர்த்தவாரி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதியான இன்று துலா உற்சவ மாதப்பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. கடைசியாக 2005-ஆம் ஆண்டு இதேபோன்று ஐப்பசி மாதத்தில் 29 தேதிகள் வந்த நிலையில், தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள இந்த மாதப்பிறப்பு தீர்த்தவாரியில் வழிபடுவது மிகுந்த சிறப்புக்குரியது என கூறப்படுகிறது. அந்தவகையில், துலா உற்சவம் மாதபிறப்பு தீர்த்தவாரி இன்று தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தெப்பக்குளம் மற்றும் மலைக்கோயில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி, காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, காவிரியின் வடக்குக் கரையிலும் எழுந்தருளுனர். தொடர்ந்து வடக்குக் கரையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Similar News