போக்ஸோ வழக்கில் 30 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 30ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-06-12 02:49 GMT

பைல் படம் 

மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் கணவர் வேறொரு திருமணம் முடித்துவிட்டு இளம்பெண்ணை தனியாக குழந்தைகளுடன் விட்டு சென்றுள்ளார். இதனால் தனது தாயாரின் வீட்டில் சில மாதங்கள் இளம்பெண் தனது குழந்தைகளுடன் வசித்துவந்த நிலையில் இளம்பெண்ணும் இரண்டாவதாக வேறொருவரை என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மதுரையை சேர்ந்த அந்த இளம்பெண் தனது 8வயது மகளுக்கு தான் இரண்டாவதாக திருமணம் செய்த நபர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் தாயார் தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இளம்பெண்ணின் இரண்டாவது கணவரான செல்வக்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த போக்சோ வழக்கானது மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்து. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி முத்துக்குமரவேல் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக செல்வக்குமார் என்பவருக்கு 30ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகையை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து செல்வக்குமாரை காவல்துறையினர் மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிவைத்தனர். இந்த போக்சோ வழக்கில் துரிதமாக வழக்குப்பதிவு செய்து வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த தல்லாகுளம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News