சமூக ஆர்வலரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு !
சமூக ஆர்வலரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-02 04:32 GMT
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (35), சமூக ஆர்வலரான இவர், இடம், பாதை, கால்வாய்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கிராமத்தின் பல்வேறு பொது விஷயங்களில் தலையிட்டு தீர்வு காண முயற்சித்து வந்தார்.
இந்நிலையில், அவரை அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (37) என்பவர் கிராமத்தின் பொது விஷயங்களில் தலையிடக் கூடாது எனக்கூறி எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து ராதா கிருஷ்ணனை கம்பியால் தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார். இது தொடர்பாக சாலைக் கிராமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.