மனுக்களை மாலையாக அணிந்து வந்த மாற்றுத்திறனாளி !
கரூரில் மனுக்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த மாற்றுத்திறனாளி.;
மாற்றுத்திறனாளி
மனுக்களை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த மாற்றுத்திறனாளி. கரூர் அடுத்த வெங்கமேடு, கொங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. மாற்றுத்திறனாளி. 75 சதவீதம் உடல் பாதிப்பு உள்ள இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஏற்கனவே வீடு இல்லாததால் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்ததின் அடிப்படையில், ஏமூர் கிராமத்தில் இவருக்கு 2022 ஆம் ஆண்டு இடம் ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலமாக வீடு கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்களை அளித்து வருகிறார். இதுவரை 30 மனு அளித்ததற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்க மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வீடு கட்டி தரப்படவில்லை.
எனவே, இன்று பாபு தான் வழங்கிய மனுக்களையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அளித்த பதில் மனுக்களையும் மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் இன்று மனு அளிக்க வந்தார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.