பிச்சை எடுக்கும் போராட்டத்தில் இறங்கிய விவசாயி !
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்துாரை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணியளவில் பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-02 05:00 GMT
போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்துாரை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணியளவில் பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். பல்வேறு வகையான மரத்தின் இலைகளை மாலையாக அணிந்து, கையில் சிறிய ரக பானையை ஏந்தி போராட்டம் செய்தார். இது குறித்து சக்திவேல் கூறியதாவது: கரடிசித்துார் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி வாய்க்கால் மதகினை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். கடந்த 10 வருடங்களாக மதகு திறக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சமத்துவ மயானமும் ஆக்கிரமிப்பில் இருப்பதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஏரி மதகு மற்றும் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பினை அகற்ற வலியுறுத்தி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என விவசாயி சக்திவேல் தெரிவித்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சக்திவேலினை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பு வைத்தனர்.