பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளிக்க மறுப்பதால் மாணவிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2024-07-02 04:04 GMT

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் 

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவிகள் தங்குவதற்கான தங்கும் விடுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்கலைகழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்துள்ளார்.

இதனை பார்த்த மாணவிகள் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் மாணவிகள் அவரை துரத்தி பிடித்துள்ளனர். மாணவிகளிடம் சிக்கிய நபர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மது போதையில் இருந்த அந்த நபர் தான் தெரியாமல் வந்துவிட்டதாகவும் 3 முறை இதுபோல வந்துள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதே பெண்கள் விடுதியில் சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் வந்து செல்வதாக மாணவிகள் கூறிய பொழுது வெறும் பிரம்மை என கூறி கல்லூரி நிர்வாகம் அலட்சியப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது மர்ம நபரை மாணவிகளே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார்  மர்ம நபரை அழைத்து சென்ற நிலையில் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்காததால்  முறையான விசாரணை மேற்கொள்ளாமல் காவல் நிலையத்திலிருந்து அந்த நபரை விடுவித்துள்ளதாகவும் பாதுகாப்பை மீறி மாணவிகள் விடுதிக்குள் மர்மநபர் புகுந்த சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News