சாலையோரம் நின்றவர் மீது லாரி மோதி பலி

குத்தாலத்தில் சாலையோரம் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் டூவீலரில் வந்தவர் தலைநசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-06-21 08:41 GMT

வைத்தியலிங்கம்

. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் வைத்தியலிங்கம். இவர் நேற்று காலை குத்தாலம் கடைவீதிக்கு தேநீர் அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய போது குத்தாலம் கடை வீதியில் எதிரே பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அறிந்த வைத்தியலிங்கம் சாலையின் ஓரம் ஒதுங்கி நின்ற நிலையில் பின்னால் வந்த பூ ஏற்றி வந்த சரக்கு வாகன ஓட்டுநரும் பேருந்து வருவதை சுதாரித்து ஓரம் கட்டியுள்ளார்.

அப்போது இருவரின் முன்னால் லாரி ஒன்றின் நின்று கொண்டிருந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பேவர் பிளாக் கற்களை பணியாளர்கள் இறக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். இதனிடையே மறுபுறத்தில் வேகமாக வந்த லாரி பேருந்து வருவதை கண்டு ஒதுங்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து ஏற்கனவே நின்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனத்தின் மீது மோதியுள்ளது. தொடர்ந்து சரக்கு வாகனம் முன்னாள் நின்ற வைத்தியலிங்கம் மீது மோதியதில் லாரியில் தலை மோதி முழுவதுமாக நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த குத்தாலம் போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காயம் அடைந்த சரக்கு வாகன ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் பேவர் பிளாக் இறக்கி கொண்டிருந்த லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சமாதானம் செய்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனிடையே சரக்கு வாகனத்தின் மீது மோதிய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News