முகத்தை மறைத்து பைக் திருடிய நபர் கைது !

குத்தாலத்தில் டிப்டாப் உடையுடன் கடந்த மாதம் குடையை கொண்டு முகத்தை மறைத்தவாறு குடியிருப்பு வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் அதே குடியிருப்பில் வசித்து வந்த நபர் பைக்கை திருடி சென்றது அம்பலம் , குற்றவாளியை கைது செய்து போலீசா சிறையில் அடைத்தனர்.

Update: 2024-06-12 09:15 GMT

கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வியாபாரி செட்டி தெருவில் அன்பு குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அதிகாலை டிப்டாப் உடையுடன் குடையால் முகத்தை மறைத்தவாறு நூதன முறையில் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஜூபிடர் இரு சக்கர வாகனத்தை சாதுரியமாக தள்ளி சென்று மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பாக குடியிருப்பில் வசிக்கக்கூடிய வாகனத்தின் உரிமையாளர் சுந்தரம் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சேத்திரபாலபுரம் ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

விசாரணை செய்த போலீசார் திருடப்பட்ட அன்பு குடியிருப்பு மாடியில் திருடன் வசிப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். குற்றவாளி சென்னையை சேர்ந்த முத்து (46) என்பதும் பெயிண்டர் வேலை செய்யும் இவர் , காரைக்காலில் உள்ள பெண்ணை திருமணம் செய்து அன்பு காம்ப்ளசில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

ஒரு வாரமாக குடியிருப்பு வளாகத்தை நோட்டமிட்டு வந்த முத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நாள் முதல் மாயமாகியுள்ளார். அண்ணனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 30 ஆயிரம் பணம் பெற்று இருசக்கர வாகனத்தை திருடி அண்ணனுக்கு கொடுத்தது தெரியவந்தது. குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News