சேலத்தில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து திருட்டு !

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என அடுத்தடுத்து வழிப்பறி இதுதொடர்பாக 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2024-07-11 05:04 GMT

 திருட்டு 

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48). நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றது.

இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். இதே போன்று சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (34). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன், மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில் ஒருவர் கவுரிசங்கர் அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பில்கிளிண்டன் (27) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த 3 வழிப்பறி சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News