முகம் கழுத்து பகுதிகளில் வெட்டப்பட்டு வாலிபர் கொலை

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கொடூர கொலை - முகம் கழுத்து பகுதிகளில் வெட்டப்பட்டு வாலிபர் கொலை

Update: 2024-02-25 07:04 GMT

போலீசார் விசாரணை

சேலம் சூரமங்கலம் அடுத்து உள்ள கந்தம்பட்டி அருகே ரயில் பாதை உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள முட்புதரில் இன்று சிலர் காலைக்கடன் கழிக்க சென்றனர். அப்போது முட்புதரில் வாலிபர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ரோஷி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார். இறந்து கிடந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும். வாலிபரின் கழுத்து பகுதியில் இரண்டு இடங்களில் சரமாரி வெட்டப்பட்டு உள்ளது. இவர் யார் எந்த ஊர் என தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News