கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்

கருங்கல் அருகே கல்லூரி மாணவி மிரட்டி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-19 14:31 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாணவி வழக்கம் போல்  கல்லூரிக்கு பஸ்ஸில் சென்றார். மாலை வெகுநேரமாகியும்  அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து  பெற்றோர் மாணவியின் செல்போனை தொடர்பு கொண்டனர்.      

அப்போது பேசிய மாணவி அவரது  பெரியப்பா மகன் மீது கருங்கல் போலீசில்  கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விடுங்கள். அப்போதுதான் நான் வீட்டுக்கு வருவேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.           இதற்கிடையில் மாணவி தனது செல்போனில் இருந்து தான் இருக்கும் இடம் குறித்த லொகேஷனை பெற்றோரின் செல்போனுக்கு அனுப்பி தன்னை மீட்குமாறு உதவி கேட்டுள்ளார்.  உடனடி மாணவியின் பெற்றோர் கருங்கல் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.       

விசாரித்ததில்  மாணவி அனுப்பிய லொகேஷன் கன்னியாகுமரி பகுதி என்று தெரிய வந்தது. இதனால் உஷாரான போலீசார் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் அளித்தனர். கன்னியாகுமரி போலீசார் மப்டி உடையில் கண்காணித்தனர். அப்போது கருங்கல் போலீசார் கூறியபடி கல்லூரி சீருடை அணிந்த மாணவி ஒருவர் வாலிபருடன் பைக்கில் செல்வதை கண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அது  கடத்தப்பட்ட மாணவி என்பது தெரிய வந்தது. உடனே அந்த வாலிபரை கைது செய்தனர்.    

மேலும் விசாரித்ததில் அந்த வாலிபர் மாணவியின் பெரியப்பா மகன் ஜெனிஷ் என்பதும்  மாணவியின் பெற்றோர் ஜெனிஷ் மீது கருங்கல் போலீசில் மற்றொரு  சம்பவம் தொடர்பாக புகார் செய்து வழக்கு பதிவானதாகவும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி மாணவியை மிரட்டி கடத்தியதாகவும் தெரிய வந்தது.  இதை அடுத்து கருங்கல் போலீசார் ஜெனிஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News