சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா. வருகிற 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

Update: 2024-07-05 05:16 GMT

 கோட்டை மாரியம்மன் 

ஆடி திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 23-ந் தேதி பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டை மாரியம்மன் கோவில் சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கோவிலில் திருப்பணிகள் நடந்ததால் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா எளிமையாக நடந்தது. திருப்பணிகள் முடிந்து கடந்தாண்டு கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு ஆடித்திருவிழா வருகிற 23-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 24-ந் தேதி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றமும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடுதலும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 5-ந் தேதி இரவு 7 மணிக்கு சக்தி அழைப்பும், 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பொங்கல் வழிபாடு, உருளுதண்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11-ந் தேதி இரவு சத்தாபரணமும், 12-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 13-ந் தேதி கொடி இறக்கம் மற்றும் பால்குடம் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News