ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது

மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-28 14:58 GMT

ஏடிஎம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட, படப்பை ஒரகடம் சாலை, மேம்பாலம் அருகே சூரிய தேவி காம்ப்ளக்ஸில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம்-ல் இன்று அதிகாலை 1 மணியளவில் வந்த மர்ம நபர் ஏடிஎம் மிஷினை கல் கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். முயற்சி தோல்வியடையவே அப்போது அவர் கொண்டு வந்த பையை தவறுதலாக அங்கேயே விட்டு சென்றுள்ளார்.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேற்படி நிகழ்வை பார்த்து காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் சொல்லியுள்ளனர். இரவு ரோந்தில் இருந்த சிறப்பு ஆய்வாளர் செல்வமணி, மற்றும் தலைமை காவலர் பாலு, இருவரும் சம்பவ இடம் சென்று பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியுள்ளார். காவல்துறையினர் அங்கிருத்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். முகமூடி அணிந்த நபர் குடிபோதையில் கல்லால் உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளதையும் , அவர் கொண்டு வந்த பையில் இருந்த ஆதார் கார்டு முகவரி கொண்டும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மதுபோதை தெளிந்து தனது பையை தேடி ஏடிஎம் மையத்திற்கு வந்தபோது, அங்கிருந்த காவலர்கள் அடையாளம் கண்டு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை பகுதியில் பணிபுரியும் நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News