அவிநாசியில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் பக்தர்களால் இரண்டாவது நாளாக தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேர் நிலை சேர்க்கப்பட்டது.

Update: 2024-04-22 11:23 GMT

தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் - பக்தர்களால் இரண்டாவது நாளாக தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேர் நிலை சேர்க்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும்.

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான  இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 15ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், 16ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும், 17ம் தேதி புஷ்ப பல்லக்கு, கைலாச வாகன காட்சிகளும் நடைபெற்றது. நேற்றைய தினம் கருணாம்பிகை உடனமர் அவிநாசி அப்பர் திருத்தேரில் எழுந்தருளிய நிலையில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. 

பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நமச்சிவாயா கோஷம் முழங்க , சிவதாளங்கள் வாசிக்க நேற்றைய தினம் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நேற்று மதியம் வரை நடைபெற்ற தேரோட்டத்தின் நிறைவாக மேற்குறத வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமச்சிவாய கோஷம் வழங்க தேரை வடம் பிடித்து இழுத்து தேர் நிலையில் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து நாளைய தினம் அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது மூன்று நாட்கள் நடைபெறும் தேரோட்டத்தின் காரணமாக தேரோட்டத்தின் போது அவிநாசி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News