கூரை வசதியுடன் சைக்கிள் ஸ்டாண்ட் - அரசு பள்ளி மாணவர்கள் வலியுறுத்தல்

வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், கூரை வசதியுடன் 'சைக்கிள் ஸ்டாண்ட்' அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-06-27 01:57 GMT

வெயிலில் காயும் சைக்கிள்கள் 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியரின் சைக்கிள் நிறுத்துவதற்கு கூரை வசதியுடன் 'ஸ்டாண்ட்' வசதி இல்லை. இதனால், மாணவ - மாணவியர், தங்களது சைக்கிளை பள்ளி சுற்றுச்சுவரையொட்டி திறந்த வெளியில் பாதுகாப்பின்றி நிறுத்துகின்றனர்.

இதனால், வெயிலில்காய்ந்து, மழையில் நனைந்து சைக்கிள் பழுதடையும் சூழல் உள்ளது. தற்போது கத்திரி வெயில் முடிந்தும், காஞ்சிபுரம் வட்டாரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நாள் முழுதும் வெயிலில் நிற்கும் சைக்கிளில் 'டியூப்கள்' வெடிப்பதாகவும், ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில், காற்று வெளியேறுவதாகவும், 'வால்டியூப்பில்' ஓட்டை விழுவதாக மாணவ - மாணவியர் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சைக்கிள் பழுதடைந்து இருப்பதால், மாணவ - மாணவியர் வீட்டிற்கு தாமதமாக செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே, பள்ளி மாணவ- - மாணவியரின் சைக்கிளை பாதுகாக்கும் வகையில், வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், கூரை வசதியுடன் 'சைக்கிள் ஸ்டாண்ட்' அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News