ரூ.97 கோடியில் தயாராகும் புதிய பேருந்து நிலையம்!!

புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2024-07-10 05:13 GMT

chengalpattu new bus stand

செங்கல்பட்டில், தற்பொழுது இருக்கும் பேருந்து நிலையம் போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய பேருந்து நிலையமாக உள்ள செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில், சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், திருப்பதி, கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு கல்லூரிகள் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் படையெடுக்கின்றனர். போக்குவரத்து நெரிசலால், வேலைக்கு செல்பவர்கள் மாணவ - மாணவிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு தலைநகரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் சுமார் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு வெண்பாக்கம் பகுதியில் சுமார் 40,274 சதுர மீட்டரில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல் மற்றும் 2ம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் ஒரு சில மாதங்களில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பேருந்து நிலைய பணிகள் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News