குறைந்த விலையில் விசா எனக் கூறி ரூ. 15.15 லட்சம் மோசடி
குறைந்த விலையில் விசா எனக் கூறி இணையவழி மோசடி புகார் தொடர்பாக வழக்குப்பதிவு.;
Update: 2024-04-01 11:32 GMT
இணையவழி மோசடி
தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும் நபரிடம் குறைந்த விலையில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 49 வயது நபர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இவரது கைப்பேசிக்கு 2023, அக்டோபர் 7 ஆம் தேதி வந்த அழைப்பில் குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டும், வெளிநாட்டு விசாவும் பெற்றுத் தருவதாகவும், வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் பெற்றுக் கொடுப்பதாகவும் மர்ம நபர் கூறினார். இதை நம்பிய அவர் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 15 லட்சத்து 15 ஆயிரத்து 385 ஐ அனுப்பினார். ஆனால், அதன் பின்னர் மர்ம நபர் கைப்பேசியை எடுக்காமலும், விமானப் பயணச்சீட்டு, விசா பெற்றுத் தராமலும் ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து வரப்பெற்ற புகாரின் பேரில் தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு காவல் துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.