வாக்காளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி அனுமதி வழங்கக் கூடாது கலெக்டர் உத்தரவு !
திருமண மண்டபங்கள் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு.
Update: 2024-03-26 11:40 GMT
திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது. உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு திருப்பூர், திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தனி நபரால் திருமணம் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் போலீசார் ஆகியோருக்கு எழுத்து பூர்வமாக திருமண அழைப்பிதழ் நகல்களுடன் உடனடியாக அளிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க கூடாது. இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீதும் தேர்தல் விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதிக்க கூடாது. திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போல் அச்சக உரிமையாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அச்சக உரிமையாளர்கள் அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் மற்றும் இதர இனங்களில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி, விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி, வெளியிடப்படும் விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் போஸ்டர்கள் மற்றும் இதர இனங்களின் அச்சு பதிக்கப்பட்ட 10 நகல்களை 1951-ம் வருடத்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 127-A (2)-ல் தெரிவித்தவாறு வெளியிடுபவரின் உறுதி மொழியுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருப்பூர், மாவட்ட கலெக்டருக்கு அச்சிடப்பட்ட 3 தினங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் போஸ்டர்கள் மற்றும் இதர இனங்களின் ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விபரங்களை தங்கள் அலுவலகத்தில் பராமரித்து வர வேண்டியது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட ரசீதுகளின் பிரதியை பராமரிக்க வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் இதர இனங்களில் வேட்பாளரின் அனுமதி பெற்ற பின்னர் அல்லது அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அச்சிடப்பட வேண்டும். தவறினால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-H-இன் கீழ் அச்சிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அச்சடிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது. தனி நபர்களை இழிவுபடுத்தக்கூடிய அல்லது விமர்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக்கூடாது. மேற்கண்ட நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.