தாலுகா அலுவலகத்தில் பறிமுதல் மணல் -பொதுப்பணி துறையினர் அலட்சியம்

திருத்தணி தாலுகா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருக்கும் மணலை பொதுப்பணி துறையினர் ஏலம் விடாமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2024-05-21 05:01 GMT

குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல்

திருத்தணி தாலுகாவில் கொசஸ்தலை மற்றும் நந்தியாறு ஆகிய ஆறுகள் உள்பட நீர்நிலைகளில் இருந்து அரசு அனுமதியின்றி கடத்தப்படும் மணல் மற்றும் சவுடு மண்ணை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்படும் மணல், திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

பின், மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து, மணல் பொது ஏலம் விடப்படும். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மணலை பல மாதங்கள் ஆகியும் பொது ஏலம் விடாமல் இருப்பதால், தாசில்தார் அலுவலகத்திற்கு வாகனங்களில் வரும் பயனாளிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து திருத்தணி தாசில்தார் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள மணலை ஏலம் விடுவதற்கு, திருத்தணி பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி, மணல் அளவீடு செய்து, அதன் மதிப்பு தெரிவிக்க வேண்டும் என கேட்டுள்ளோம். ஆனால் பொது பணித்துறையினர் அளவீடு செய்து கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் மணல் ஏலம் விடுவதில் காலதாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News