சேலம் அம்மாபேட்டையில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி !
சேலம் அம்மாபேட்டையில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி. மற்றொரு தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-19 05:34 GMT
கட்டிட தொழிலாளி பலி
சேலம் அம்மாபேட்டையில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். சேலம் அருகே அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 35), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் அம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள ஒருவரது வீட்டில் சத்தியராஜ் கட்டிட வேலை செய்தார். அவருடன் வீராணம் அருகே சேனைநகரை சேர்ந்த பூவரசன் (29) உள்பட சிலரும் கட்டிட வேலையில் ஈடுபட்டனர். சத்தியராஜ் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரின் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சத்தியராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூவரசன் அவரை காப்பாற்றுவதற்காக அங்கு ஓடி வந்தார். அங்கு கிடந்த தண்ணீரில் பூவரசன் மிதித்த போது அவரையும் மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சத்தியராஜ் பரிதாபமாக இறந்தார். பூவரசனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.