சேலம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு !
சேலம் அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
Update: 2024-04-05 08:24 GMT
சேலம் கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடி அண்ணா நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதற்கிடையே சமீபகாலமாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2-ந் தேதி காளியப்பன் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காளியப்பன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற கருப்பூர் போலீசார் காளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ஆகியோர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காளியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விஷ ஊசி போட்டு கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.