தண்டவாளத்தில் விரிசல் - நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

சித்தேரி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டது.

Update: 2024-07-04 18:03 GMT

தண்டவாளத்தில் விரிசல் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்ட ஊழியர்கள் உடனே இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை வழியிலேயே நிறுத்தப்பட்டது.

சுமார் 15 நிமிடங்களுக்கு பின் விரிசல் சரிசெய்த பின்னர் அந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. முன்னதாகவே தண்டவாள விரிசலை கண்டறிந்ததால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News