குத்தாலம் அருகே கொலை மிரட்டல்: அதிமுக பிரமுகர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தனது மனைவியுடன் பேசாதே என அதிமுக பிரமுகரை கண்டித்த மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-23 16:20 GMT

அதிமுக பிரமுகர்

மயிலாடுதுறை மாவட்டம் காளி பொய்கைக்குடி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மின்வாரிய அலுவலர் சிவக்குமார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் இவரது மனைவியிடம், அதே மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றிவருபவரும்,

ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளராகவும் உள்ள திருமங்கலம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கீர்த்திவாசன்(32) பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சிவக்குமார் கீர்த்திவாசனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் கடந்த 17-ஆம் தேதி கட்டளைச்சேரி வயல்வெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த சிவகுமாரை வழிமறித்து தாக்கியதுடன் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டதுடன், சிவக்குமாரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீஸார் வழக்குப் பதிந்து கீர்த்திவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News