துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளதால் 50 கிராமமக்கள் அவதி

திருவாலங்காடு பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியும் துணைமின் நிலையம் அமைக்கும் பணி கிடைப்பில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-19 01:15 GMT

துணை மின் நிலையம் அமைக்கும் பணி தாமதம்

திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 30 "கிராமங்களுக்கு கடம்பத்துார் மற்றும் மோசூர் துணைமின்நிலையம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மணவூர், தொழுதாவூர், குப்பம் கண்டிகை உட்பட 24 கிராமங்களுக்கு கடம்பத்துாரில் இருந்தும், சின்னம்மாபேட்டை வியாசபுரம், அரிசந்திராபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு மோசூர் துணைமின்நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கண்ட இரண்டு துணைமின்நிலையத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் இருந்து மின்சாரம் கிடைப்பதால், 110 - 150 வோல்ட் மின்சாரம் மட்டுமே இப்பகுதிகளுக்கு கிடைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் பல வீடுகளில் மின்விசிறி கூட சரியாக இயங்காத சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த, 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் மின்சாரம் தட்டுப்பாடு பிரச்னை உள்ளதால் திருவாலங்காடு பகுதியில் துணைமின்நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் 2020ம் ஆண்டு திருவாலங்காடு மின்துறை அதிகாரியால் முன்மொழிவு அளிக்கப்பட்டது.

இதையடுத்து 2021ம் ஆண்டு மின்துறை ஒப்புதல் வழங்கியது. அதன்படி பழையனுாரில் 14 கோடியே 73 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 1.64 ஏக்கர் பரப்பளவில் துணைமின்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த துணைமின்நிலையம் 20 எம்.வி.ஏ., திறன் உடையது. எனவே 50 கிராமங்களுக்கு மின்சாரம் முழு சப்ளை கிடைக்கும் எனவும், இதில் 200 மின்மாற்றிகள் வரை அமைத்து முழு மின்சாரம் பெறப்படும். இந்நிலையில் துணைமின்நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags:    

Similar News