திருமணமான 67 நாளில் பெண் மர்மச் சாவு : உறவினர்கள் சாலை மறியல்
புது மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் உடற்கூறாய்வு செய்ய அலைக்கழிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
மார்த்தாள் மேரி
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள மேலத்திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் மகன் விவேக் (35). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கும், தஞ்சாவூர் கரந்தை சருக்கை சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த கிருபையன் மகள் மார்த்தாள் மேரிக்கும் (29) நிகழாண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அடுத்த சில நாள்களில் தாய் வீட்டுக்கு வந்த மார்த்தாள் மேரி அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில், அக்டோபர் 22 ஆம் தேதி மார்த்தாள் மேரியை உறவினர்கள் அழைத்துச் சென்று கணவர் வீட்டில் விட்டனர். இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை மார்த்தாள் மேரிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவரை விவேக் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அங்கு மார்த்தாள் மேரியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் மார்த்தாள் மேரியின் பெற்றோர் அளித்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மார்த்தாள் மேரியின் உடலைக் கைப்பற்றி, திருவையாறு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால், திருவையாறு மருத்துவமனையில் விவேக்குக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என மார்த்தாள் மேரியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதன்படி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மார்த்தாள் மேரியின் உடல் கொண்டு செல்லப்பட்டபோது, இடமில்லை எனக் கூறி அங்குள்ள ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கரந்தை சருக்கை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா, காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். உடற்கூறாய்வு முறைப்படி நடைபெறும் என கோட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, மார்த்தாள் மேரி திருமணமாகி 67 நாள்களில் இறந்ததால், அவரது மரணம் குறித்து கோட்டாட்சியர் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.