போதையில்லா தமிழ்நாடு ; அரசு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-28 02:40 GMT

போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.  பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலில் அருகே தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி தொடங்கி வைத்தார். பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கடைவீதி வழியாக சென்ற பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

பின்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டத்திற்கு முதல்வர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ராஜ்மோகன் வரவேற்றார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் பேசுகையில், "போதைப்பொருட்களினால் சமுதாயம் கெடுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான போதை. எனக்கு சின்ன வயதிலிருந்தே காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற போதை. அந்தப் போதை இன்று நிறைவேறியுள்ளது. நல்ல விஷயங்களை மாணவர்கள் மனதில் போதையாக ஏற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் போதையில்லா தமிழகத்தை நிச்சயம் உருவாக்க முடியும். ஒருமுறை போதைப் பொருளை உங்களுக்கு யாராவது பழக்கப்படுத்திவிட்டால் அப்புறம் நீங்களே அதை தேடிப்போகும் நிலை ஏற்பட்டுவிடும் , நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள். போதைப்பொருள் விற்பனை குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிந்தால், தயக்கமின்றி காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள். உங்களது ரகசியம் பாதுகாக்கப்படும் அனைவரும் ஒன்றிணைந்தால் போதையில்லா தமிழகம் சாத்தியம்" என்று பேசினார். .

இக்கூட்டத்தில் பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர் சர்வம் சரவணன், சமூக ஆர்வலர் எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ராணி நன்றி கூறினார் .

Tags:    

Similar News