சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-22 03:16 GMT
ஓவியபோட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் , புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் ராஜலட்சுமி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசியதாவது, சுற்றுச்சூழலின் தன்மை மற்றும் அதன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதே சுற்றுச்சூழல் விழிப்புணர்வாகும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவித்தல் என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு எளிய வழியாகும், மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி என்பது வரும் தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

பல்வேறு மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகளை திறம்பட கடைப்பிடிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. மிகப் பெரிய அளவிலான ஈடுபாடு மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மிகவும் சிறந்த முறையில் செயல்படுத்தி, சுற்றுச்சூழல் இயக்கங்களை வலுப்படுத்த இயலும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சரியாகப் புரிந்து கொள்ளச் செய்தல், அதன் மூலம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், அவற்றை சரியான முறையில் உபயோகிக்கச் செய்தல், ஆகியவையே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடிப்படைக் குறிக்கோள்களாகும் என்று பேசினார். முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஓவிய போட்டியில் சிறப்பாக பங்களிப்பு செய்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறைவாக தன்னார்வலர் சாரதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News