ஆந்திராவில் புதிய அணை கட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய அணை காட்டுவதால் பாலாற்றை நம்பியுள்ள விளை நிலங்கள் பாழாகும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

Update: 2024-07-03 05:57 GMT

பாலாறு (பைல் படம்)

பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மாதவப்பள்ளி, யாதவப்பள்ளி ஆகிய இரு இடங்களில் அணை கட்டப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கும் என, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், பாலாறு பாதுகாப்பு இயக்கங்கள் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் துவங்கும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் உள்ள திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பயணித்து, வங்கக்கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் 93 கி.மீ., துாரமும், ஆந்திராவில், 33 கி.மீ., துாரமும், தமிழகத்தில் 222 கி.மீ., துாரமும் பாலாறு பாய்கிறது. தமிழகத்தில் அதிகபடியான துாரம் பாயும் பாலாற்றின் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சில இடங்களில் தடுப்பணை கட்டிய நிலையில், போதிய தடுப்பணைகள் கட்டப்படாமலேயே உள்ளன. ஆனால், 33 கி.மீ.,துாரம் மட்டுமே பாலாறு பாயும் ஆந்திர மாநிலத்தில், அம்மாநில அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags:    

Similar News