தந்தை, மகன் மீது தாக்குதல் - வீடியோ வைரல்

முசிறி மாணிக்கநகர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் தந்தை, மகனை தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-07-03 04:06 GMT

வீடியோ காட்சி 

திருச்சி மாவட்டம், முசிறி மாணிக்கநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் தனது வீட்டின் அருகிலேயே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டிற்கு முசிறியை சேர்ந்த கண்ணன் (45), ரமேஷ் (47) உள்பட நான்கு பேர் காரில் வந்து இறங்கி அங்கிருந்த சரவணனிடம் தோட்டத்தில் இருந்து மின்சாரம் மோட்டார் காணாமல் போய்விட்டது. அந்த மோட்டாரை யாரும் தங்களிடம் விற்பனை செய்ய வந்தார்களா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நாங்கள் பழைய இரும்பு மற்றும் பாட்டில்தான் விலைக்கு வாங்குவோம் மோட்டார் எல்லாம் வாங்குவதில்லை. அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒரு மோட்டாரை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு கடைக்கு வந்து விற்பனைக்கு எடுத்துக் கொள்வீர்களா என்று கேட்டதற்கு நாங்கள் இது போன்ற பொருட்களை வாங்குவதில்லை என்று சொன்னதால் அந்தநபர் சென்று விட்டார் என கூறிக்கொண்டிருக்கும் போது திடீரென கண்ணன், ரமேஷ் உள்ளிட்டோர் சரவணன், அவரது தந்தை கணேசன் (60) ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு மரப்பலகையால் தாக்கியும், கைகளால் அடித்துள்ளனர்.

பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளனர். இதில் தந்தை, மகன் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முசிறி காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்திருந்த நிலையில், தந்தை மகன் இருவரையும் காரில் வந்த நான்கு பேர் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக்வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து கண்ணன், ரமேஷ் உள்பட நான்கு பேர் மீது முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News