சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஊத்துமலையில் திடீரென காட்டுத்தீ !
சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஊத்துமலையில் திடீரென காட்டுத்தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-03-19 05:29 GMT
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஏற்காடு உள்ளிட்ட வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் அவ்வப்போது திடீரென காட்டுத்தீ பற்றி எரியும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த ஊத்துமலை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ மளமளவென பரவியது. இந்த தீ காய்ந்த மரங்கள், சருகுகளில் பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. ஏனென்றால் காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் காட்டுப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்தனர். பகலில் யாராவது ஊத்துமலை காட்டுக்குள் சென்று அவர்கள் மரங்களுக்கு தீயை வைத்துவிட்டு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகிறார்கள். இருப்பினும், கோடை காலம் என்பதால் காட்டுக்குள் அத்துமீறி யாராவது நுழைகிறார்களா? என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று ஏற்காடு சேர்வராயன் தெற்கு எல்லைக்குட்பட்ட 60 அடிபாலம் அருகில் அடர்ந்த வனப்பகுதியில் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.