துப்பாக்கிசூடு வழக்கு விசாரணை : ஜூன் 7ஆம் தேதி தள்ளிவைப்பு

துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Update: 2024-04-27 13:17 GMT

கோப்பு படம் 

துாத்துக்குடியில், கடந்த 2018ல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.

அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வழக்கில் சேர்த்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட போலீசார், கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளை வழக்கில் இணைத்து, கூடுதல் மனுவை ஹென்றி திபேன் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள, 17 அதிகாரிகளும் பதில் அளிக்க 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நோட்டீஸ் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அனைவரும் ஜூன் 7க்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஜூன் 18க்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News