உணவக உரிமையாளரிடம் ரூ.54 லட்சம் மோசடி!

ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி உணவக உரிமையாளரிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-19 02:17 GMT

பைல் படம் 

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த (45) வயது பெண் ஊட்டியில் உணவக தொழில் நடத்தி வருகிறார். மேலும் ஆன்லைன் மூலம் தொழில் வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆர்வமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் இவருக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதலாகவும், இரட்டிப்பாகவும் வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டது.

மேலும் இதுபோல் பலருக்கும் கூடுதல் லாபம் வழங்கப்பட்டுள்ளது என்று உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய அவர் முதலில் ஒரு லட்சம் முதலீடு செய்து, ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆசை அதிகரித்ததால் அந்தப் பெண் பல்வேறு தவணைகளாக வங்கி கணக்கு மூலம் ரூ. 54 லட்சத்து 68 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் இந்த முறை அவருக்கு கூடுதல் பணம் வரவில்லை. மேலும் அவர் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பணம் வாங்கியவர்களையும் அந்த பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, பணம் மாற்றப்பட்ட வங்கிக்கு கடிதம் அனுப்பி வங்கி கணக்கில் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Tags:    

Similar News