தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது
பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் நண்பனை கத்தியால் குத்திய வாலிபர் கைது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-26 05:58 GMT
தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது
சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் அருகே ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமாரை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சதீஷ்குமாரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமாரை கத்தியால் குத்தியது அவரது நண்பரான சுவர்ணபுரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி பிலால் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், சதீஷ்குமாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலால் ரூ.1,000 கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை பிலால் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் தான், சதீஷ்குமாரை அவர் கத்தியால் குத்தியது தெரியவந்தது. மேலும் இவர், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த கோபி (37) என்பவரிடம் மணியனூர் அருகே கத்தியை காட்டி ரூ.1,500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாகவும் பிலால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.