சேலத்தில் ஹோலி பண்டிகை

சேலத்தில் வசிக்கும் வடமாநிலத்தினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2024-03-26 01:20 GMT

சேலத்தில் வசிக்கும் வடமாநிலத்தினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. இந்த பண்டிகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் நாராயண நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஒன்று திரண்டு ஹோலி பண்டிகையை ஆடி, பாடி கோலாகலமாக கொண்டாடினர்.

குறிப்பாக ஏராளமான பெண்கள் பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடினர். ஆண்கள் பலர் தலைப்பாகையை அணிந்து கொண்டு கொண்டாடினர். அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என இருபாலரும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை முகத்தில் பூசியும், தூவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் வண்ண பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்தனர். இளைஞர்கள் பலரும் வண்ணப் பொடிகளை தூவியபடி நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். இதேபோல் சேலம் சங்கர் நகர், செவ்வாய்பேட்டை, அழகாபுரம், மணியனூர், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். இந்த கொண்டாடத்தின் போது பலர் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News