நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா !

குழந்தை திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், பெண்களுக்கான உதவி எண்கள் 181, 1098 பற்றி மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Update: 2024-03-09 11:11 GMT
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முன்பாக மாணவிகள், பேராசிரியைகள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் இணைந்து “பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம்” பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலியை நடத்தினர். இதில் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மனித சங்கிலியை தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. சுஜாதா, மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தினவிழா ஏற்பாட்டினை மேற்கொண்டு வரவேற்புரையும் நிகழ்த்தினார். விழாவினை இராஜா, கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையேற்று பெண்கள் உரிமை பற்றியும்,பெண்களுக்கான வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் மாணவிகளிடையே உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையை சேர்ந்த வித்யா, மைய நிர்வாகி, ஒருங்கிணைந்த சேவை மையம், பேபி பிரிஸ்கில்லா, மூத்த ஆலோசகர், ஒருங்கிணைந்த சேவை மையம், மகாலஷ்மி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மகளிர் அதிகார மையம் மூவரும் சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் பாதுகாப்பு, சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது, பெண் கல்வியின் அவசியம், பெண்களுக்கான உரிமை திட்டங்கள், குழந்தை திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், பெண்களுக்கான உதவி எண்கள் 181, 1098 பற்றி மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மூன்றாம் ஆண்டு புள்ளியியல் மாணவி பரணி நன்றியுரை வழங்கினார். விழாவின் இறுதியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Tags:    

Similar News