இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விபத்து காப்பீடு அறிமுகம்

இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Update: 2024-03-15 07:05 GMT

அஞ்சலகம் 

தபால் நிலையங்களில் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ரூ.15 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசுவாமி தெரிவித்துள்ளார்.

 கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசுவாமி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தபால் துறையின் கீழ்செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ. 555, ரூ. 755 பீரீமியத்தில் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தபால் நிலையங்கள் (தபால்காரர், கிராம தபால் ஊழியர்கள்) மூலம் மிககுறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் பயன்பெறுவதற்கு 18 வயது முதல் 65 வயது உடையவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்பபடிவம் முகவரி சான்றிதழின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி , வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஆகியவற்றிற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

விபத்து காப்பீடு

விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை), விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் திருமண செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒருநாளைக்கு அதிகபட்சம் ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்) வழங்கப்படும். விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

ஆண்டிற்கு வெறும் ரூ.555, ரூ.755 மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நலநெருக்கடிகளையும் நிதிநெருக்கடிகளையும் உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் நிலையங்கள் தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News