ஈஷாவின் காவேரி கூக்குரல்; நாமக்கல்லில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 3.10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

Update: 2024-06-06 05:27 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 3.10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 - 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் தொடக்கமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் மக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 3,10,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள்( NTLOA )சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சங்க தலைவர் அருள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு, மரம் நடும் இயக்கத்தை துவக்கி வைத்தார். ஈஷா கடந்த 26 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களில் மரங்களை நடவு செய்து வருகிறது. தற்போது வரை ஈஷாவின் அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் 10.9 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில், தனியார் விவசாய நிலங்களில் 2,69,485 மரங்கள் நடப்பட்டுள்ளது. நல்ல வருமானம் தரக்கூடிய மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள். ஏக்கருக்கு 260 முதல் 300 மரங்கள் வரை நடலாம். மற்ற பயிர்களுடன் மரம் நடவிரும்பினால், வேலி ஓரங்களில் மட்டும் 80 முதல் 120 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் குறைந்த விலையில் ரூ. 3 வீதம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் காவேரி கூக்குரல் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  சங்க நிர்வாகிகள் பாலச்சந்திரன், குமரவேல் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News