பூட்டிய வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை - கொள்ளையன் கைது

போரூர் அருகே பூட்டிய வீட்டில் 42 பவுன் நகைகளை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-26 02:09 GMT

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 

போரூர், ஆலப்பாக்கம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (54). இவர் கடந்த 16-ம் தேதி குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் தோழியின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் சாந்தி வீட்டில் நகை திருடியதாக பூந்தமல்லி வெற்றிலைத் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 31 பவுன் தங்க நகை, 348 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான ராஜேஷ் மீது திருட்டு, கொலை முயற்சி உட்பட 36 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News