குமரி : பழங்குடியினர் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் 

பேச்சிப்பாறை மற்றும் பத்துக்காணி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 03:46 GMT
 ஆட்சியர் ஸ்ரீதர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-       மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பேச்சிப்பாறை மற்றும் பத்துக்காணி அரசு பழங்குடியினர்  நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள தலா ஒரு தாவரவியல் (Botany) பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000/- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி காலிப்பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவோ/ பதவி உயர்வு மூலமாகவோ நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர்.

பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்க்கும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லையெனில் ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதி வாய்ந்த நபர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலியமானது. தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.07.2024 முதல் 15.07.2024-க்குள் கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News